ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் ரூ.19.72 இலட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைக்குமாறு பொதுமக்கள் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒன்றிய குழு தலைவர் விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்பட்ட பில் தொகையில் ரூ.1.30 இலட்சம் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க விடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் ஒப்பந்ததாரரிடம், மீதம் வழங்க வேண்டிய பில் தொகையை கொடுக்க, கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி நிதியில் போதிய நிதி இல்லாத காரணத்தால் இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். எனவே ஒன்றிய பொது நிதியிலிருந்து மீதி தொகையை வழங்குவதாக ஒப்பந்ததாரரிடம் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர். அம்மு தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர். தாஸ்பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர். விநாயகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர். கண்ணகி தனசேகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment